155
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்கிரிய இல்லத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் (IUSF) சேர்ந்த மாணவர்கள் இன்று (மே 16, 2026) 3ஆவது நாளாகவும் தொடர்ந்து தங்கியிருந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் பொதுமக்களின் உடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த மே 14ஆம் திகதி மாணவர்கள் குழுவொன்று இந்த இல்லத்திற்குள் நுழைந்தது. சட்ட ரீதியான உரிமையாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், இந்தச் சொத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்சமயம் அரச உடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகங்களில் நிலவும் பேராசிரியர்களுக்கான வளாகப் பற்றாக்குறை, மாணவர் விடுதிப் பற்றாக்குறை உள்ளிட்ட உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த இல்லத்தைப் பயன்படுத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையிலேயே மாணவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
Spread the love

