53
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) இனந்தெரியாத நபர்களால் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த அவரது பதாகையிலேயே இவ்வாறு செருப்பு மாலை அணிவித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சமீபகாலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், சபை நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு கூட்டங்களை குழப்புவதாகவும் அருச்சுனா இராமநாதன் மீது பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதிகாரிகளுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் தர்க்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை தோற்றுவித்திருந்தன.
தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இவ்வாறான சபை நாகரீகமற்ற செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, யாழ் பிரதான வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரது 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love

