யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் நேரில் முன்னிலையாகி, அங்கிருந்து நிகழ்நிலையில் (Online) சாட்சியமளிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அதிரடிக் கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு அரங்கேறிய இக்கொடூரக் கடத்தல் சம்பவம் தொடர்பான ஆள்கொணர்வு மனு (Habeas Corpus), நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் திரட்டிப் பாரிய போராட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதனை முன்னின்று ஒழுங்கமைத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அதற்கு முதல் நாள் (டிசம்பர் 9) யாழ். ஆவரங்கால் பகுதியில் வைத்து மர்மமான முறையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி உறவினர்களால் 2012-ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கடத்தல் சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது. அதன்படி 2012 செப்டம்பர் 19 முதல் யாழில் விசாரணைகள் ஆரம்பமாகின. கடந்த 2017-ஆம் ஆண்டு இவ்வழக்கின் முக்கிய சாட்சியாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இணைக்கப்பட்டு, அவரை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு நேரில் சமூகமளிப்பதில் தனக்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார். பாதுகாப்புத் தடைகள் குறித்த சத்தியக் கடதாசியை (Affidavit) அவர் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 2-ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது அவர் நிகழ்நிலை (Online) ஊடாகச் சாட்சியமளிக்க யாழ். மன்று அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், வீட்டில் இருந்தபடி நிகழ்நிலையில் சாட்சியமளிக்க முடியாது எனத் தெளிவுபடுத்திய யாழ். நீதவான், கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் உள்ள ஏதேனும் ஒரு பிரதான நீதிமன்றத்திற்கு நேரில் சென்று அங்கிருக்கும் நீதவான் முன்னிலையிலேயே நிகழ்நிலை ஊடாக யாழ். மன்றுடன் இணைய வேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளார்.
தான் கொழும்பில் எந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார் என்பதையும், அதற்கு ஏதுவான மூன்று சாத்தியமான திகதிகளையும் யாழ். நீதிமன்றத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கோட்டாபய தரப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மன்று இறுதி செய்யும் ஒரு திகதியில் அவர் சாட்சியமளிக்க வேண்டும்.
#LalithKuganCase #JaffnaMagistrate #GotabayaRajapaksa #EnforcedDisappearances #OnlineTestimony

