யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு (JAF) அன்பளிப்பாக வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடராஜர் சிலையை அங்கு உத்தியோகபூர்வமாகப் பிரதிஷ்டை செய்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகருக்கு அவசர நினைவூட்டல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (2026 ஜூன் 19) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இச்சிலை விவகாரம் குறித்துப் பேசப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (2026 ஜூன் 23, செவ்வாய்க்கிழமை) இக்கடிதம் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்டச் செயலாளர் (மாவட்ட அதிபர்) ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு என பக்திப் பூர்வமாக அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இன்னமும் உரிய இடத்தில் நிறுவப்படாமல் முடக்கப்பட்டு இருப்பது பற்றி எம்மால் சுட்டிக்காட்டப்பட்டது. “இந்த விடயத்தில் தாங்களும் (அமைச்சர்) யாழ்ப்பாண மாவட்ட செயலரும் தனிப்பட்ட ரீதியில் அக்கறை எடுத்து, அந்த நடராஜர் சிலையை மேற்குறிப்பிட்ட விமான நிலைய வளாகத்தில் முறைப்படி நிறுவிடத் தேவையான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அன்றைய கூட்டத்தில் கோரியிருந்தேன்.”
இக்கோரிக்கையை மீண்டும் நினைவூட்டி, விமான நிலையத்திற்கு வரும் சர்வதேசப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இச்சிலையைத் துரிதமாகப் பிரதிஷ்டை செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என அக்காடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#JaffnaAirportStatue #CVKSivagnanam #MinisterChandrasekar #PalalyInternationalAirport #NatarajarStatueJaffna

