42
இலங்கையில் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்களைக் கையகப்படுத்தும் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகளின் கீழ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் அவரது முக்கிய நண்பரான கே. புஷ்பகுமார் (இனியபாரதி) ஆகியோரின் சொத்துக்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே பல்வேறு கடத்தல்கள், ஆள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இவர்களின் சட்டவிரோத சொத்துக் குவிப்பு மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து சி.ஐ.டி அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இவர்களின் வங்கி கணக்குகளும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் எனப்படும் நபரின் பல கோடி ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், சொகுசு வாகனங்கள் என்பன சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டின் கீழ் காவற்துறையினரால் அதிரடியாக முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. ரஜீவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்தே, தற்போது பிள்ளையான் மற்றும் இனியபாரதி ஆகியோரை நோக்கியும் இந்தச் சொத்து விசாரணைப் வலை விரிவடைந்துள்ளதாகத் பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love

