102
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை காவல் துறையினர் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான பரிசீலனை, இரண்டாவது நாளாகவும் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனு மீதான மேலதிக சமர்ப்பிப்புகளை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகித் தனது வாதங்களை முன்வைத்தார். பிரதிவாதிகள் தரப்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் முன்னிலையாகியிருந்தார்.
இந்த மனுவில் காவல் துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

