Home இலங்கை“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!”

“சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் நேரடி சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயார்!”

செம்மணி மனிதப் புதைகுழி முறைப்பாட்டாளர் கிருபாகரன் அதிரடித் தகவல்!

by admin
யாழ்ப்பாணம் செம்மணி அணையா விளக்கு திடலில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி “உரிமைப் பந்தம்” என்ற தொனிப்பொருளில் 427 தீப்பந்தங்களை ஏந்திய விழிப்புணர்வுப் போராட்டம் நேற்றைய திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் முதன்மை முறைப்பாட்டாளர் கிருபாகரன், யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இயங்கிய இராணுவச் சித்திரவதை முகாம்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்த பல அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்துள்ள முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
சித்திரவதை முகாம்களின் இரகசியப் பின்னணி: 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதி முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. கைதடி, மணியந்தோட்டம், கொழும்புத்துறை, அரியாலை போன்ற பகுதிகளில் பொதுமக்களைக் கைது செய்து சித்திரவதை செய்வதற்காக இராணுவத்தின் ‘7சி எல்ஏ’ என்ற 15 பேரடங்கிய இரகசியப் படையணி செயற்பட்டுள்ளது. புங்கங்குளம், மாம்பழச் சந்தி, நெடுங்குளம், பொன்னம்பலம் சந்தி மற்றும் அரியாலை கொட்டுகிணற்றடி ஆகிய இடங்களில் சித்திரவதை முகாம்கள் இயங்கியுள்ளன.
உயிருடன் உள்ள நேரடிச் சாட்சிகள்:
இத்தகைய கொடூர சித்திரவதை முகாம்களில் இருந்து, படுகொலை செய்யப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர் கடவுளின் சித்தத்தால் தப்பிப் பிழைத்து, தற்போது அரியாலையில் வாழும் நேரடிச் சாட்சியங்கள் இன்றும் உள்ளனர். இராணுவத்தினரின் சித்திரவதைகளைக் கண்ணால் கண்ட சான்றுகளும் அவர்களிடம் உண்டு.
சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை:
இந்தச் சாட்சியங்கள் யாரும் இலங்கையின் உள்நாட்டு நீதித்துறையையோ அல்லது காவற்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரையோ (CID) நம்பி வாக்குமூலம் அளிக்கத் தயாராக இல்லை. 1999இல் சர்வதேச மேற்பார்வையில் நடத்தப்பட்ட செம்மணி அகழ்வாராய்ச்சி வழக்குகள் கூட 27 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, முறையானதொரு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே, அனைத்து சான்றுகளையும் சாட்சியங்களையும் சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க அரியாலை மக்கள் தயாராக இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற கொடூரங்களை வெளிக்கொண்டுவரவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரியும் செம்மணி மண்ணில் மக்கள் தொடர்ந்து தங்களின் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More