Home இலங்கை யாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020…

யாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020…

by admin

யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா கண்காட்சி மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடன் இணைந்த தந்தை செல்வா கலையரங்கில் கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவதால் நாளை (28) செவ்வாய்க்கிழமை மறுநாள் புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பார்வையிடலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா – 2020 (Jaffna vintage Photo Festival-2020) ஏற்பாட்டாளர்களின் ஒருவரான தர்மபாலன் டிலக்ஸன் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் ஒளிப்பட சமூகத்தின் சார்பில் 2019 நவம்பரில் யாழ்ப்பாணம் ஒளிப்படத் திருவிழா -2019 ஒழுங்கு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா – 2020 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒளிப்படத்துறையில் பிரகாசித்து மறைந்த பல ஒளிப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் யாவற்றையும் தொகுத்து சுமார் 500 ஒளிப்படங்களைக் காட்சிப்படுத்தியுள்ளோம். இவற்றில் 1900ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் இருந்து 1960, 1970ஆம் ஆண்டுகளின் ஒளிப்படங்களும் அடங்குகின்றன.

அதுமட்டுமின்றி அன்றைய காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட ஒளிப்படக் கருவிகள், அவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய காலப்பகுதியில் ஒளிப்படங்களைப் பிரதி எடுக்கப்படுத்தப்பட்ட ஸ்டியோ உள்ளிட்ட நிறைய விடயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணம் ஒளிப்படத் துறையை மறுசீரமைப்புச் செய்யும் நோக்குடன் இந்தத் திருவிழாவை ஒழுங்கமைத்துள்ளோம். இந்தத் திருவிழா கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகி இன்று 27ஆம் திகதிவரை நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. ஆனால் மக்களின் ஆர்வமும் ஆதரவும் கிடைத்திருப்பதால் மேலும் இரண்டு நாள்கள் நீடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பலர் தமது ஒளிப்படங்களை கொண்டு வந்து தருகின்றார்கள். அதுமட்டுமின்றி ஒளிபடத் திருவிழாவுக்கு வரும் பலர் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒளிப்படங்களில் இருப்பது தமது உறவுகள் என அடையாளம் காட்டியுள்ளனர்.

எனவே எல்லா வகையிலும் இந்தக் கண்காட்சி அனைவருக்கும் திருப்தி அடைய வைப்பதனால்தான் இரண்டு நாள்கள் நீடிப்பது என்று தீர்மானித்தோம். கண்காட்சியைப் பார்வையிடாதவர்கள் இந்த இரண்டு நாள்களில் வந்து பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றார்.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More