ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பினை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டதன் படி அவரை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டது.
எனினும் தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு நீதிபதிகள் குழு அறிவித்தது.

