124
யாழ்ப்பாணம், இளவாலை காவல் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பெரியவிளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு, நேற்று மாலை பாரிய குழு மோதலாக உருவெடுத்தது. இரு தரப்பிற்கும் ஆதரவாக இரு கும்பல்கள் இளவாலை காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே மோதிக்கொண்டன.
மோதல் குறித்து இரகசியத் தகவல் கிடைத்ததும், இளவாலை காவற்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவற்துறையினரைக் கண்டதும் மோதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. எனினும், துரத்திச் சென்ற காவற்துறையினர் ஒருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மோதலில் காயமடைந்த இரு இளைஞர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, காயமடைந்தவர்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தப்பியோடிய ஏனைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love

