219
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் அதிரடித் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இரு சகோதரர்களும் இன்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்டுத்தப்பட்டனர்.
கொலைச் சம்பவத்திற்கு முன்னதாக, சந்தேகநபர்கள் இருவரும் அக்குரேகொடவில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட் அருகில் காத்திருந்த துப்பாக்கிதாரிகளுக்கு, தாங்கள் வந்த காரிலிருந்து ஒரு பையை (ஆயுதங்கள் அடங்கியது என சந்தேகிக்கப்படும்) வழங்கும் காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. சட்டத்தரணி அந்த வீதி வழியாக வரும் தகவலை துப்பாக்கிதாரிகளுக்கு இந்தச் சகோதரர்களே வழங்கியுள்ளனர். கொட்டாவை பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (16.02.26) இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இக்கொலையானது வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் பாதாள உலகக் கும்பலால் திட்டமிடப்பட்டுள்ளது.கரந்தெனிய சுத்தா’**வின் ஆலோசனையின் பேரில் ‘டுபாய் நிபுண’ மற்றும் ‘மல்வானை டுடூ’ ஆகியோர் இதனை நெறிப்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தலங்கம, அக்குரேகொடவில் உள்ள சுப்பர் மார்க்கெட் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்தத் தம்பதியினர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் காவற்துறை மாஅதிபரின் உத்தரவின் பேரில் 12 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
________________________________________
Spread the love

