Home இலங்கைநெடுந்தீவில் கடற்படைக்குக் காணி: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் கடும் கண்டனம்

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி: ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் கடும் கண்டனம்

by admin

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘குயின் டவர்’ (Queen’s Tower) பகுதிக்கு அருகில் கடற்படையினருக்கு (Navy) ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்குப் பிரதேச செயலாளர் எடுத்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இக்காணி விவகாரம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுக்கும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது.

நெடுந்தீவில் கடற்படைக்குக் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் பதிலளித்தார். ‘குயின் டவர்’ பகுதிக்கு அருகில் உள்ள ஒரு ஏக்கர் காணியைப் பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழு (Land Use Committee) கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.

 “மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், காணிப் பயன்பாட்டுக் குழுக்களை இரகசியமாக நடத்தி முப்படையினரின் தேவைக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார். இத்தகைய முடிவுகள் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தில் இராணுவத்தினரையும் கடற்படையினரையும் மட்டுப்படுத்தப் போவதாகக் கூறி, ‘மக்களின் காணிகள் மக்களுக்கே’ என முழக்கமிட்டு வருகிறார். ஆனால், போர் முடிந்து 17 வருடங்கள் கடந்தும் இங்கே இரகசியமாகப் புதிய காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன” என கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த ஆக்கிரமிப்புக் குற்றச்சாட்டை முன்வைத்த போது, கூட்டத்தில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என்ற பெயரில் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் குறுக்கிட்டனர்.

“கடந்த ஆட்சிக் காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்? இராணுவத்திடமிருந்து காணிகளைப் பெற்று மக்களுக்குக் கொடுத்தீர்களா? தற்போது ஏன் இந்த அரசாங்கத்திடம் மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்?” என அவர்கள் கஜேந்திரகுமாரை நோக்கி வினவினர்.  இதனால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான முரண்பாடு ஏற்பட்டு, கூட்டத்தில் பெரும் குழப்ப நிலை உருவானது. நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கடற்றொழில் அமைச்சர், “கூட்டத்தில் தேவையற்ற கருத்துக்களைக் கூற வேண்டாம்” என எச்சரித்துச் சூழலை அமைதிப்படுத்தினார்.

#NeduntivuLandIssue  #GajendrakumarPonnambalam #JaffnaDCCMeeting  #NavyLandAcquisition  #NPP_SupportersJaffna

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More