Home இலங்கைவடக்கில் காணி மோசடியில் 9 முக்கிய நொத்தாரிசுகள் அம்பலம்:

வடக்கில் காணி மோசடியில் 9 முக்கிய நொத்தாரிசுகள் அம்பலம்:

by admin

வடக்கு மாகாணத்தில் வெளிப்படுத்தல் உறுதிகளைப் பயன்படுத்திப் பாரிய காணி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 9 பிரசித்தி பெற்ற நொத்தாரிசுகள் (Notaries) காவற்துறையினரால்   உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இத்தகைய சிக்கலான காணி ஆவண மோசடிகளைக் கண்டறிவதற்குத் தமது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குமாறு காவற்துறைத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று (2026 ஜூன் 24, புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில், ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே காவற்துறையினர் இந்த அதிரடித் தகவல்களையும், கடந்த 4 ஆண்டுகால காணி வழக்குகள் குறித்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களையும் பகிரங்கப்படுத்தினர்.

மாவட்டம் வாரியாகப் பதிவான வெளிப்படுத்தல் உறுதிகள் (2022 – 2026):

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தில் மட்டும் மொத்தமாக 3,839 வெளிப்படுத்தல் உறுதிகள் (Declaration Deeds) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விபரங்கள் பின்வருமாறு:

மாவட்டம் பதிவு செய்யப்பட்ட வெளிப்படுத்தல் உறுதிகள்
யாழ்ப்பாணம் 1,874
மன்னார் 958
கிளிநொச்சி 570
முல்லைத்தீவு 321
வவுனியா 116
மொத்தம் 3,839

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் 2026 மே மாதம் வரை பதிவாகியுள்ள உத்தியோகபூர்வக் காணி மோசடி வழக்கு விபரங்களைக் காவற்துறையினர் பின்வருமாறு சமர்ப்பித்தனர்:

  • 2023 ஆம் ஆண்டு: மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 15 வழக்குகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

  • 2024 ஆம் ஆண்டு: மொத்தம் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 25 வழக்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 வழக்குகளின் விசாரணைகள் இன்னும் நிலுவையில் (Pending) உள்ளன.

  • 2025 ஆம் ஆண்டு: மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 வழக்குகள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், 14 வழக்குகளின் விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

  • 2026 ஆம் ஆண்டு (மே மாதம் வரை): நடப்பு ஆண்டில் இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வழக்கு நிறைவடைந்துள்ளதுடன் 8 வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

  

போலி உறுதிகள் எழுதுவதற்குக் காணிப் பதிவகத்தின் சில அதிகாரிகளும், 9 பிரதான சட்டத்தரணிகளும்/நொத்தாரிசுகளும் கூட்டுச் சதி செய்துள்ளமை அம்பலமாகியுள்ளதால்,  பழைய தோம்புகள், காணி வரைபடங்கள் (Plans) மற்றும் மூல ஆவணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதில் காவற்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்குப் போதிய தொழில்நுட்ப அறிவு இல்லாததால், பதிவாளர் திணைக்களம் மூலம் அவர்களுக்கு விசேட பயிற்சிகளை (Special Training) வழங்க வேண்டும்  என காவற்துறைத் தரப்பில்   கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 புதிய இணக்கப்பாட்டின் படி, காணி மோசடிகளில் ஈடுபடும் சட்டத்தரணிகளைக் கைது செய்யச் சட்டமா அதிபரின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதால், அடையாளம் காணப்பட்ட 9 நொத்தாரிசுகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயவுள்ளன.

#NotaryFraudJaffna  #NorthernLandScam2026  #PoliceInvestigationSL #GovernorVedhanayagan #DeclarationDeedStats

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More