யாழ். போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டில் மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக, போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்ற காதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான விசேட குழுவினர், யாழ். போதனா வைத்தியசாலையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை நேரில் பார்வையிட்டதுடன், பல மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள், எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு வசதிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
இதன்போது தற்போது பயன்பாட்டிலுள்ள CT Scan இயந்திரம் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பெருமளவிலான நோயாளிகளுக்குச் சேவை வழங்கி வருகிறது. இதனால் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் ஒரு புதிய இயந்திரம் அவசியம் என்பதை கதிரியக்க நிபுணர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். நிபுணர்களின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள், அடுத்த ஆண்டில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இந்த புதிய இயந்திரம் நிறுவப்படுவதன் மூலம் நோயாளிகளின் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறைவதோடு, அவசர மற்றும் விசேட மருத்துவ சேவைகளை விரைவாக வழங்க முடியும். அத்துடன், வடக்கு மாகாண மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதில் இது முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும் என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
#YarlTeachingHospital #HealthSectorSL #JaffnaNews #CTScan #NalinthaJayatissa #NorthProvince

