பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு (Tuition Centre) ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் என்பதுடன், இந்த விபத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் உட்படப் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் (Contractor) ஆகிய இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் ஒரு பகுதி கட்டுமானத்தில் இருந்துள்ளது. ஆபத்தான முறையில், சிறுவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெற்று வந்துள்ளன. தரம் குறைந்த கட்டுமானப் பொருட்கள் மற்றும் மேல்தளத்தில் ஏற்றப்பட்ட அதிகப்படியான பாரம் காரணமாகவே இந்தக் கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்த சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தடையின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் கருத்துத் தெரிவிக்கையில், இது நெஞ்சை உலுக்கும் ஒரு பேரவலமாகும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த விபத்திற்குப் பொறுப்பான மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அனைவருக்கும் எதிராகச் சட்டம் மிகக் கடுமையான முறையில் பாயும் என உறுதிபடக் கூறியுள்ளார்.
#LahoreTragedy #KahnaAccident #PakistanNews #SafetyFirst #Rescue1122

