54
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியோரைக் கௌரவிக்கும் “சேவாபிமானி பதக்கம்” (Sevabhimani Padakkama) மற்றும் “சேவைப் பதக்கம்” (Service Medal) ஆகியவற்றுக்கான தகுதி நிபந்தனைகளை, முப்படையினருக்கு மட்டுமே எனக் கட்டுப்படுத்தி இலங்கை அரசு புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன், கடந்த ஜூன் 23ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொதுச் சிவில் அதிகாரிகள் ஆகியோர் இப்பதக்கங்களுக்கான தகுதியிலிருந்து நீக்கப்பட்டு, இது இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படையினருக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2009 மே 19ஆம் திகதிக்குப் பின்னர் யுத்தத்திற்குப் பிந்தைய பணிகளுக்கு பங்களிப்பு செய்த முப்படையினரின் அனைத்து தரப்பினருக்கும் (சாதாரண மற்றும் தன்னார்வப் படையினர்) இப்பதக்கங்கள் வழங்கப்படலாம். “சேவாபிமானி பதக்கம்” பெறுவதற்கு குறைந்தது ஆறு வருட கட்டாய தொடர் சேவையும், “சேவைப் பதக்கம்” பெறுவதற்கு 2009 மே 19ஆம் திகதிக்குப் பின் மூன்று வருட சேவையும் அவசியம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முந்தைய வர்த்தமானி அறிவிப்புகள் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இறந்துவிட்ட சேவையாளர்களின் முறையான வாரிசுகளுக்கோ அல்லது வாரிசுகளால் பரிந்துரைக்கப்படும் நபருக்கோ மரணத்திற்குப் பின்னரும் இப்பதக்கங்களை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் தகுதிநிலை தொடர்பாக தனியான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love

