50
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நேரடியாகக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
விரைவில் தேர்தல் நடைபெறும் என ஸ்டாலின் முன்னர் தெரிவித்திருந்த கருத்தின் பின்னணி இப்போதுதான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும், ஆட்சி மாற்றம் குறித்து அவர் அப்போது பேசியதன் வெளிப்பாடாகவே தற்போது எம்.எல்.ஏக்கள் மீதான பேரம் பேசும் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) முயற்சி மேற்கொள்வதாக பெ.சண்முகம் குற்றம் சாட்டினார். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு உறுப்பினர்கள் இடம்பெயர்வது இயல்பான அரசியல் நடைமுறை என்றபோதிலும், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அதைச் செய்வது நியாயமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்தே திமுக தரப்பினர் “குதிரைப் பேரம், கழுதைப் பேரம்” போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்ற உண்மையை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் கூர்மையாக விமர்சித்தார்.
அதிமுக கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலே எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவிக்கக் காரணமாக அமைந்ததாகவும், அது தவெக ஆட்சிக்கு என தனியாக அளிக்கப்பட்ட ஆதரவு அல்ல எனவும் அவர் விளக்கமளித்தார். ஓர் அமைச்சரின் தனிப்பட்ட நடவடிக்கைக்கும் அரசின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எம்.எல்.ஏக்கள் தாங்களாகவே முன்வந்ததாகக் கூறியபோதிலும், அவர்களை இணைத்துக்கொள்ள ஊக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியதாகவும், 4 எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தபோதே இதை ஊக்குவிக்கக் கூடாது எனத் தெரிவித்ததாகவும் பெ.சண்முகம் நினைவுகூர்ந்தார்.
திமுகவுடன் இணைந்திருக்கும்போது ஒரு விதமாகவும், அதிலிருந்து விலகும்போது வேறு விதமாகவும் அக்கட்சியின் அணுகுமுறை மாறுவதாக அவர் விமர்சித்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், திமுகவும் அதிமுகவும் இல்லாத ஆட்சி வேண்டும் என்றே தமிழக மக்கள் தீர்ப்பளித்திருப்பதாக அவர் கூறி முடித்தார்.
Spread the love

