மத்திய பசுபிக் பிராந்தியக் கடற்பகுதிகளிலிருந்து இந்து சமுத்திரக் கடல் பிராந்தியத்திற்குள் ஊடுருவியுள்ள எல்நினோ (El Niño) காலநிலை மாற்றம், நடப்பு யூலை மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை உறைப்பான வெப்பத் தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும் கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா எச்சரித்துள்ளார்.
யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பினால் (MSEDO) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எல்நினோ காலநிலைத் தாக்கம்’ குறித்த விசேட செயல்மர்வில் முதன்மை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போதைய நாட்களில் ஏற்பட்டுள்ள கடல் வெப்ப ஏற்றம் காரணமாக ஸ்ரீலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் அதிகப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனப் பேராசிரியர் சுட்டிக்காட்டினார். இக் காலநிலை மாற்றத்தால் இலங்கையின் வடமாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பாரிய நீர்த்தட்டுப்பாடு (Water Scarcity) மற்றும் கடுமையான வறட்சி நிலவும்.
நிலத்தின் ஊடாக வெப்பத்தைக் கடத்துவதை விட 16 மடங்கு அதிவேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற தத்துவத்தின் அடிப்படையில், சமுத்திரக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடல் வெப்ப ஏற்றமானது ஏனைய பகுதிகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகின்றது. ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ, அதன் மறுதலையாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாரிய புயல் கலந்த உறைப்பான மழைவீழ்ச்சியையும் (Heavy Rainfall) தோற்றுவிக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பின்னரே வான்பரப்பில் தாழமுக்கங்கள் உருவாக வாய்ப்புள்ளதால், அதுவரை வறட்சி நீடிக்கும்எனத் தொிவித்தாா்
எல்நினோ இந்து சமுத்திரத்தை முழுமையாக அண்மித்துள்ளதால், பொதுமக்கள் தற்போதிலிருந்தே முறையான நீர் முகாமைத்துவத்தை (Water Management) உறைப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும், வீண் விரயங்களைத் தவிர்த்து நீர்த்தட்டுப்பாட்டினைச் சமாளிக்கத் தயாராக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வடமாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ். மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எஸ். அகிலன் மற்றும் மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பின் பிரதிநிதி ஜான்சன் பிரிடாரோ உள்ளிட்ட பல அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகக் கலந்துகொண்டனர்.
#ElNinoLankaAlert2026 #JaffnaUniversity #NorthernWaterScarcity #IndianOceanWarming #MSEDOWorkshopJaffna

