மத்திய சிரியாவின் (Syria) டமாஸ்கஸ் – டேர் அல்-ஜோர் (Damascus-Deir Ezzor) பிரதான நெடுஞ்சாலையில் நேற்று சனிக்கிழமை (2026 ஜூலை 25) இடம்பெற்ற கொடூரமான வீதி விபத்தில் குறைந்தது 35 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அல்-சுக்னா (Al-Sukhnah) மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்மைரா (Palmyra) ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பாலைவன நெடுஞ்சாலையில், இரு பயணிகள் பேருந்துகள் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதியதில் இப் பாரிய பேரவலம் அரங்கேறியுள்ளது.
சிரிய உள்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு வெளியீடு செய்துள்ள உத்தியோகபூர்வ விபரங்களளின்படி மோதிக்கொண்ட இரு பேருந்துகளில் ஒன்று சிரிய நாட்டின் ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் படை’ (Internal Security Forces) வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தாகும். மற்றைய பேருந்து சிவில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்தாகும்.
மோதிய அதிவேகத்தில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரியத் தொடங்கியதால் மீட்பு நடவடிக்கைகள் பெரும் சவாலாக அமைந்தன. சம்பவ இடத்திற்கு அவசரமாக விரைந்த அவசரக்கால மேலாண்மைத் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்களை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, சிரிய பாதுகாப்பு அமைச்சு விசேட ராணுவ ஹெலிகொப்டர்களைப் (Helicopters) பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை ஹோம்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு (Homs Military Hospital) வான்வழியாகக் கொண்டு சென்று சேர்த்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரினால் சிரியாவின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைவடைந்துள்ள நிலையில், இந் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் குறைவாக இருந்தமையே இக் கொடூர விபத்துக்கு முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சு இச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
#SyriaBusCrash35Dead2026 #PalmyraHighwayAccident #DeirEzzorDamascusCrash #SyrianSecurityForcesBus#MiddleEastTransportEmergency

