இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்..

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும் என கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தினார் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.

“போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பதிலை அரசு இன்னும் வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவகையில் கனடா அரசு யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்யவேண்டும்” என்று யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கனடாத் தூதுவரிடம் எடுத்தரைத்தார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கிவருகிறது. தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்” என்று கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் அதற்கு பதிலளித்தார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.