Home இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது..

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் – தடை நீங்கியது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவாலயமொன்றை அமைப்பதற்கு ஏற்பட்திருந்த தடை, மாணவர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியுள்ளது.

வன்னி இறுதிப் போரின்போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், உறவுகள் உட்பட, முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவுகூர்வதற்கு, நினைவாலயமொன்றை அமைக்க, பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.

இதற்கமைய, இதற்கான பணிகளை பல்கலைக்கழக வளாக முன்றலில், கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும், அந்த இடத்தில் நினைவாலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்புரையையடுத்து, தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பல்கலைகழக நிர்வாக உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே, பல்கலைக்கழகத்தில், கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது, போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை எனவும், அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும், உயர்மட்டத்தினரால், மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், அதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில், வியாழக்கிழமை (19) தொடக்கம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவாலயம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் மே 18ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள், முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் மாணவர்களால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.