Home இலங்கை யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு மாடு இறைச்சிக்காக இன்னும் வெட்டப்படவில்லை..

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு மாடு இறைச்சிக்காக இன்னும் வெட்டப்படவில்லை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழில்.காட்சிப்படுத்தப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த மாடு இன்று வெட்டப்படவில்லை. குறித்த மாட்டினை காட்சிப்படுத்திய வேளை நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் அறவிப்பட்டிருந்தது. அந்நிலையில் நுழைவு சீட்டினை வழங்குவதற்கு மாநகர சபையிடம் அனுமதி பெறவில்லை எனவும், அதற்காக வரிகள் தமக்கு செலுத்தப்பட்டவில்லை எனவும் யாழ் காவல் நிலையத்தில் மாநகர சபையினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை அடுத்து மாட்டினை காட்சிப்படுத்திய நபரை காவல்துறையினர் அழைத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்.

அத்துடன் இன்று காலை திடீரென சுகாதார பிரிவினரும் இறைச்சிக்கு குறித்த மாட்டை வெட்ட அனுமதிக்கவில்லை எனவும், பின்னர் மாட்டினை மீண்டும் ஒரு தடவை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் காலை 9 மணிக்கு பின்னர் வெட்ட அனுமதி தரப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறாக ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இன்று காலை மாடு இறைச்சிக்காக வெட்டப்பட்டவில்லை. அதேவேளை மாடு இன்றைய தினம் இறைச்சிக்காக வெட்டும் நோக்குடன், யாழ்.பண்ணை பகுதியில் உள்ள கொள்கலனில் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னணி

யாழில் மாடொன்றை காட்சிப்படுத்தி அதனை இறைச்சிக்காக வெட்டுப்படவுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது

யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாகவுள்ள காணி ஒன்றில் குறித்த மாடு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காட்சிப்படுத்தப் பட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடு வெட்டப்படுவதாக இருந்தது. அதன் ஒரு பங்கு இறைச்சி ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாடு யாழ்.குப்பிளான் பகுதியில் உள்ள ஒருவர் வளர்த்துள்ளார், குடும்பத்தின் பொருளாதார நிலைமை காரணமாக அதனை தமிழர் ஒருவருக்கு விற்றோம். அவர் அதனை வளர்க்க எனவே வாங்கி சென்றார். இறைச்சிக்காக அதனை விற்பார் என தெரிந்திருந்தால் அதனை அவரிடம் விற்று இருக்க மாட்டோம்.

இந்த மாடு 2016.03 25 ஆம் திகதி பிறந்தது. இரண்டரை வயதுடைய மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த மாட்டை தன்னார்வலர்கள் முன் வந்து அதனை காப்பற்றுங்கள் என மாட்டின் ஆரம்ப உரிமையாளர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்நிலையில் குறித்த மாடு 6 இலட்சம் ரூபாய் எனவும் , அதனை காப்பாற்ற விரும்புவோர் 6இலட்சம் கொடுத்து மாட்டை கொள்வனவு செய்யுமாறு மாட்டை இறைச்சிக்கு வெட்ட இருந்த நபர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாட்டினை காட்சிப்படுத்தி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த போது யாழில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது பின்னர் அந்த மாடு சிலரின் நிதியுதவியுடன் மாட்டினை  வாங்கி அதனை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நல்லூர் பிரதேச சபையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், சபை எல்லைக்குள் மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்க கூடாது எனவும். மாடு வெட்டவும் அனுமதிக்க கூடாது என தீர்மானம் முன் மொழியப்பட்டு , அது சபையில் ஏக மனதாகவும் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More