Home இலங்கை யாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…

யாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…

by admin

“யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது. பொது நலம் காக்கும் நபராக இருந்தால் பொதுநல சேவைகள் செய்த ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய முடியும். வீதியில் செல்பவர் வந்து இவ்வாறான மனுவைத் தாக்கல் செய்ய முடியாது” இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மாநகர சபை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றுரைத்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையானார்.

மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். நான்காவது பிரதிவாதியான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் லக்ஸ்மன் ஜெயக்குமாருடன் முன்னிலையானார்.

“யாழ்ப்பாணம் மாநகர ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்தப்பட்டவையாக மனுதாரரின் சட்டத்தரணி மனுவில் அணைத்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அவர் இப்போது மாநகர சபை நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. “5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தால் பாதிப்பில்லை. பெல்ஜியம் நாடு இந்த தொழில்நுட்பத்தை வரவேற்றுள்ளது.

மனுதாரர் மனுவில் கதிர்வீச்சு தொழில்நுட்பம் பற்றி விவரித்துள்ளார். அதுகூட எங்கும் நடக்கவில்லை. அனைத்து நாடுகளுமே உரியவாறு பரிசோதனை செய்த பின்பே தொழில்நுட்பங்களை அனுமதிக்கின்றன” என்று edotco நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

அனைத்து தரப்பு விவாதமும் நிறைவடைந்த நிலையில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைப்பதற்காக மனுவை வரும் டிசெம்பர் 6ஆம் திகதிவரை வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஒத்திவைத்தார்.

பின்னணி

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி கடந்த ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் அமரும் வடக்கு மாகாண மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் இந்த மனுவை தனது சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதன் ஊடாக சமர்பித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது பிரதிவாதியாகவும் Edotco Services Lanka (pvt)LTD நான்காவது பிரதிவாதியாகவும் இணைக்கப்பட்டுள்ளனர்.–

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More