குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஆட்சியில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்னவை நீர்கொழும்பு சிறையில் சென்று பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறு ஆட்சி பீடம் ஏறியதோ அதே விதமாக ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, லஞ்ச ஊழல் மோசடி விசாரணைப் பிரிவு போன்றன அரசியல் நோக்கில் இயங்கி வருவதனை ஜனாதிபதி புரிந்து கொண்டமை வரவேற்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
காலம் தாழ்த்தியேனும் ஜனாதிபதி இதனைப் புரிந்து கொண்டார் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது எனவும் நாட்டில் தற்போது சட்டம் உரியமுறையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும், காட்டாட்சி நடத்தப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது நாட்டில் நல்லிணக்கம் கிடையாது வடக்கிலும் தெற்கிலும் வெடிச்சத்தம் கேட்கின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்ட சம்பவம் தமது ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் அது தாம் செய்ததாக சித்தரிக்கப்பட்டிருக்கும் எனவும் தற்போது காவல்துறை உத்தியோகத்தர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது எனவும் நாட்டில் கடுமையான ஊடக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.