Home இலங்கை குற்ற புலனாய்வு துறை கொழும்பு வருமாறு அழைப்பு – அழைப்பினை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்.

குற்ற புலனாய்வு துறை கொழும்பு வருமாறு அழைப்பு – அழைப்பினை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்.

by admin



குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கொழும்புக்கு வருமாறு குற்றபுலனாய்வு பிரிவினர் தன்னை அழைத்த போது , தான் கொழும்புக்கு வர முடியாது என அந்த அழைப்பை நிராகரித்து உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்புக்கு வருமாறும் அது தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை தாம் பதிவு செய்ய வேண்டி உள்ளதாகவும், அத்துடன் பௌத்த தேரர் ஒருவரை அவதூறாக பேசியமை தொடர்பிலும் வாக்கு மூலம் பெற வேண்டும் எனவும் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம், தன்னால், கொழும்புக்கு வர இயலாது உள்ளதாகவும், தேவையெனில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு வருகை தந்து வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளுமாறும் , அதற்கு முடியாவிட்டால் யாழ்ப்பாணம் காவல் நிலையம் வந்து தன்னால் வாக்கு மூலம் வழங்க முடியும் என குற்றபுலனாய்வு பிரிவினருக்கு அறிவித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 18 ஆம் திகதியன்று, சுயாதீன ஊடகவியலாளர் த.பிரதீபனிடமும் குறித்த ஊடக சந்திப்பு தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More