Home இலங்கை ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்தது – யாழ்.ஊடக அமையம்

ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்தது – யாழ்.ஊடக அமையம்

by admin

ஈழத்திற்காக பாலாவின் தூரிகைகள் பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை. என யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பிரபல கருத்தோவியரான பாலா அண்மையில் வரைந்த கருத்தோவியத்திற்காக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லை பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. குறித்த அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

கேலிச்சித்திரமொன்றிற்காக ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான பாலா தமிழகத்தினில் கைது செய்யப்பட்டுள்ளமையினை இலங்கையின் வடக்கின் பலம் வாய்ந்த ஊடக அமைப்பான யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழகத்தின் நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு தீயினில் கருகி பலியான இசக்கிமுத்து குடும்பம் தொடர்பாக விமர்சன கார்ட்டூன் வரைந்த கார்டூனிஸ்ட் பாலா சென்னை, போரூர் அருகே, பெரிய பணிச்சேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து, இன்று நவம்பர் 5-ம் தேதி பகல் 1.30 மணி அளவில்,காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கார்டூனிஸ்ட் பாலா கடந்த பல ஆண்டுகளாக குமுதம் வார இதழின் அதிகாரப்பூர்வ கார்டூனிஸ்டாக பணி புரிந்தவர். தற்போது சுயாதீன கார்டூனிஸ்டாக பணிசெய்து வரும் அவர், பல்வேறு பிரச்னைகளிலும் தன் கருத்தை வலியுறுத்தி கார்ட்டூன் வரைந்து வருகிறார்.
இலங்கையின் வடகிழக்கு தமிழர் தாயகத்தினில் தென்னிலங்கை அரசுகளாலும் அதன் துணைப்படைகளாலும் ,அரச முப்படைகளாலும் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ள 41 இற்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையம் தொடர்ந்து போராடிவருகின்றது.

இந்நிலையினில் இலங்கை அரசிற்கு குறையாது இந்திய அரசின் கண்முன்னால் ஊடக கொலைகளும் கைதுகளும் அரங்கேறத்தொடங்கியுள்ளது. கௌரி லங்கேஸ்,தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி என இந்தியா முழுவதும் அரசுக்கு எதிராக கருத்துகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்திற்கு குரல் கொடுத்தும் போராடியும் வருகின்றதொரு அமைப்பு என்ற வகையினில் இந்தியக்கொலைகளையும் கைதுகளையும் யாழ்.ஊடக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது.எமது தொப்புள் கொடி உறவுகளது உரிமைக்குரலிற்கு கைகொடுக்கின்றது.அதிலும் பாலாவின் தூரிகைகள் ஈழத்திற்காக பல தடவைகள் அறச்சீற்றத்துடன் எழுந்து குரல் கொடுத்ததை நாம் மறந்து போக தயாராகவில்லை.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தின் மீதும், மனித உரிமை மீதும், ஊடக சுதந்திரத்தின் மீதும் நம்பிக்கைக்கொண்டுள்ள தேசமாக இந்திய தேசம் உருவாக யாழ்.ஊடக அமையத்தின் கோரிக்கைகள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதரகம் ஊடாக இந்திய மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் யாழ்.ஊடக அமையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More