காவற்துறை மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இன்று (20.01.18)  முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டு முல்லைத்தீவு பிரதான காவற்துறை நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து புதிய காவற்துறை நிலையத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

நீண்டகாலமாக காவற்துறை நிலையம் இல்லாத நிலையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் வாடகை அடிப்படையில் முல்லைத்தீவு காவற்துறை  நிலையம் இயங்கி வந்த நிலையில் இன்றையதினம் அதற்கென காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த புதிய காவற்துறை  நிலைய கட்டிடம்  2160சதுர மீட்டர் பரப்பளவில், 145.7 மில்லியன் செலவில் ஒருவருட காலத்தில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் வட பிராந்திய சிரேஷ்ட பிரதி காவற்துறை  மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ,யாழ். மாவட்ட பிரதி காவற்துறை மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.