Home இந்தியா காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 9 பேர் கொண்ட குழு- இந்திய அரசின் காவிரி வரைவு திட்ட அறிக்கையில் பரிந்துரை

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 9 பேர் கொண்ட குழு- இந்திய அரசின் காவிரி வரைவு திட்ட அறிக்கையில் பரிந்துரை

by admin



காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை தனது வரைவு செயல் திட்டத்தில் இந்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா? என்பதும் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது. காவிரி வரைவு திட்ட அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் இந்திய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

குழப்பிய ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கால அவகாசம் முடிந்த நாளில் ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு இந்திய மத்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இதனால் தீர்ப்பை அமல்படுத்த தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3ஆம் திகதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, தொடர்ந்து காலதாமதம் செய்துவந்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின், இன்று காவிரி வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.

14 பக்க காவிரி வரைவு திட்ட அறிக்கை தாக்கல்

அப்போது, மூடி முத்திரையிடப்பட்ட உறையில் 14 பக்க காவிரி வரைவு திட்ட அறிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில் யு.பி.சிங் தாக்கல் செய்தார். வரைவு திட்ட அறிக்கையின் அம்சங்கள் குறித்து விளக்கமளித்த யு.பி.சிங், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இணையாக 9 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு தயார் என தெரிவித்தார்.

மூன்றில் ஒன்றை அமைக்கத் தயார்

காவிரி ஆணையம், குழு, வாரியம் ஆகிய மூன்றில் ஒன்றை அமைக்கத் தயார் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழுவில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 4 பகுதி நேர உறுப்பினர்களும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் ஊதியம் உள்ளிட்ட செலவுகளில் தலா 40 சதவீதத்தை தமிழகமும், கர்நாடகாவும், 15 சதவீதத்தை கேரளாவும், 5 சதவீதத்தை புதுச்சேரியும் ஏற்க வேண்டும் என வரைவு திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More