Home இலங்கை அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..

அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் , செலவுகளையும் வடமாகாண சபையே செய்தது என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், பந்தல் போட்டது, கதிரை போட்டது, பந்தங்களில் எண்ணெய் தோய்த்தது, பந்தங்களை நாட்டியது என அனைத்து செலவுகளும் ஒழுங்கமைப்பும் வடமாகாண சபையே செய்தது.

முதலமைச்சர் தீபந்தம் எடுத்துகொடுக்க பிரதான சுடரை ஏற்றிய அந்த பிள்ளையை நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு ஏற்றி இறங்கியது கூட மாகாண சபையே.

நினைவேந்தல் நாள் அன்று காலை 10 மணிவரையில் மாகாண சபையே நிகழ்வை ஒழுங்கமைத்தது. ஆனால் திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை தாம் நடத்த தொடங்கினார்கள்.

அந்த நேரத்தில் நாம் பயந்து ஒதுங்கவில்லை. அது ஒரு புனிதமான நிகழ்வு அதில் குழப்பங்கள் ஏற்படாது நிகழ்வு நடந்து முடிய வேண்டும் என்பதனால் ஒதுங்கி நின்றோம்.

இதற்கு மேலும் பல விடயங்களை சொல்லலாம். ஆனால் அந்த புனித நிகழ்வை பற்றி இங்கே கதைத்து அதனை விவாதத்திற்கு கொண்டு வர விரும்பாத காரணத்தால் அதனை அத்துடன் விடுகிறேன் என தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More