Home இலங்கை ஒரே பார்வையில் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மகிந்தவின் வாக்குமூலமும்….

ஒரே பார்வையில் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் மகிந்தவின் வாக்குமூலமும்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மூளையில் அறிவு இருப்பவர் மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுத்  திணைக்கள அதிகாரிகளை அனுப்பி வைக்க மாட்டார் – SB..

மூளையில் கொஞ்சம் அறிவு இருக்கும் ஒருவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சாட்சியங்களை பெற அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அனுப்பி வைக்க மாட்டார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியது, முன்னாள் ஜனாதிபதி அல்ல. இதனால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து வாக்குமூலம் பெறுவது என்பது கேலிக்குரியது. இது ஒரு நாடகம், இதற்கான பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுதியுள்ளார் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டில் இருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மகிந்த வாக்குமூலம் ஒன்றை பெற்ற பின்னரே அரசாங்கம்  மூன்றாண்டு நிறைவை கொண்டாடுகிறது…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்ற பின்னரே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தனது மூன்றாண்டை கொண்டாட முயற்சிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.  வீரக்கொட்டிய மெதமுலன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்ட பின்னர். ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. எனினும் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கி வருகிறது. நாட்டில் வரிகளை அதிகரித்துள்ளது. தேசிய வளங்களை விற்பனை செய்யவதை மறைக்க முயற்சித்து வருகிறது. ஷிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டாவது ஆண்டை கொண்டாடியது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலத்தை பெற்று தனது மூன்றாவது ஆண்டை கொண்டாடுகிறது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் பொய்யான நாடகங்களை அரங்கேற்றி, ஊடக கண்காட்சிகளை நடத்தி வந்ததாகவும் டி.வி.சானக்க குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின் நண்பரே அன்றி பகைவர் அல்ல ….

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களின் நண்பரே அன்றி பகைவர் அல்ல எனவும் இது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுக்கொள்வது முற்றிலும் அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்காக எதனையும் செய்ய முடியாத இந்த எமனாட்சி (நல்லாட்சி) அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாக பழிவாங்கியே தனது மூன்றாவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. ஜனாதிபதித் தேர்தல் நெருங்க, நெருங்க மைத்திரி மற்றும் ரணில் ஆகியோரின் கால்கள் நடுங்க தொடங்கியுள்ளன. எவ்வாறான அரசியல் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டாலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் மகிந்த தலைமையில் மக்கள் சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கீத் நொயார் விடுதலையாகி  சென்றாராம். விடுதலைப் பெற்றுச் செல்வது தவறா?

கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தன்னிடம் வாக்குமூலம் பெற்றமையானது முற்றிரும் பழிவாங்கும் அரசியல் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான அறியாமல், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தன்னை சந்தித்து வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது, இதனால், அரசாங்கத்தின பிரதானிகளின் தேவைக்கு அமையவே தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மகிந்த ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5 அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்த வந்திருந்தனர். மூன்று மணி நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். கரு ஜயசூரிய தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினாரா என்று கேட்டனர். அவர் பேசிய பின்னர், கீத் நொயர் விடுதலை செய்யப்பட்டார என்று கேட்டனர். கரு ஜயசூரிய பேசினாரா என்பது எனக்கு நினைவில் இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை பேர் பேசுகின்றனர்.

இவை அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வேலைகள். இது தான் நாட்டின் நிலைமை. அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களின் தன்மை. அரசாங்கத்தின் பிரதானிகள் அறியாது சீ.ஐ.டியினர் என்னிடம் வர முடியாது. அவர்களுக்கு இப்படி நடக்காது என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

இது பழிவாங்கல். இப்படியான பழிவாங்கல்கள், மனதை நோகடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. நாங்கள் தாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது.அதிகாரிகளை விமர்சித்து பத்திரிகைகளில் ஏதாவது வெளிவந்ததா என அதிகாரிகள் என்னிடம் கேட்கின்றனர்.

இவை எந்த நாளும் நடப்பவை. கரு ஜயசூரிய தொலைபேசியில் என்னுடன் பேசிய பின்னர், கீத் நொயார் விடுதலையாகி சென்றாராம். விடுதலைப் பெற்று செல்வது தவறா?. எப்படி இருந்தாலும் இதில் நல்லதும் இருந்தது. கரு ஜயசூரிய என்னிடம் இரவு 11.20 அளவில் இதனை கூறினராம். இதன் மூலம் இரவு 10 மணிக்கு நான் உறங்க செல்வதில்லை என்பது தெரியவந்துள்ளது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More