Home இலங்கை வசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா?

வசந்த கருணாகொடவும் – ரவீந்திர விஜேகுணரட்னவும் கைது செய்யப்படுவார்களா?

by admin

சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்குமெனில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட, தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன ஆகியோரை கைது செய்ய புலனாய்வுப்பிரிவினர் தயாராகவுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைத்தமை, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எனும் அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சாட்சிகளை சேகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் இருவரும் உடன் கைது செய்யப்படுவர் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் முன்னாள் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கருணாகொட கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்து அறிந்திருந்தமைக்கான சான்றுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டறிந்துள்ளது.

அதன்படி அவரை இந்த சம்பவத்துக்கான பொறுப்புக் கூறல் எனும் அடிப்படையில் கைது செய்ய முடியுமா என சட்ட மா அதிபர் ஆலோசித்து வருவதாகவும் ஆலோசனை கிடைத்ததும் வசந்த கருணாகொட,தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அதேவேளை முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிராதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன , இந்த கடத்தல் விவகாரத்தின் பிராத சந்தேக நபரான லெப்டினன் கேணல் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் குமார ஹெட்டி ஆரச்சி எனும் நேவி சம்பத்துக்கு அடைக்களம் கொடுத்தமை, நாட்டைவிட்டு தப்பிச் செல்ல உதவியமை, நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளில் அநீதியான் முறையில் தலையீடு செய்தமை தொடர்பில் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிப்பட்டுள்ளது

மேலும் நேவி சம்பத் தப்பிச் செல்ல, கடற்படை தளபதிக்கு சொந்தமான கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, தற்போது மக்கள் வங்கிக் கணக்கொன்று புலனாய்வுத்துறையினரால் சோதனைக்கு உட்படுத்த நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

மேலும் கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய சித்ரவதைமுகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த இரகசிய சித்ரவதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கேணல் தரத்தினை உடைய தற்போது, கொமாண்டராக ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும், கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை புலனாய்வு வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குற்றப் புலனயவுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த லெப்டினன் கேணல் ஹெட்டியாராச்சி தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More