Home இலங்கை யாழில் பதின்ம வயதுத் திருமணங்கள் – இணைந்து வாழும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரிப்பு…

யாழில் பதின்ம வயதுத் திருமணங்கள் – இணைந்து வாழும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரிப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள், இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட காவற்துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் கூட்டத்தில் பங்கேற்ற தரப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளும் 18 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அத்துடன், பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கின்றது” எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

“யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவுகள் அனைத்திலும் பதின்ம வயதுத் திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்த பதின்ம வயதினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என காவற்துறையினர் உறுதியளித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More