Home இலங்கை புத்தூர்ச்சந்தி வீடொன்றில் வாள் வீச்சுக் குழு அட்டகாசம் – நகைகளும் பணமும் கொள்ளை…

புத்தூர்ச்சந்தி வீடொன்றில் வாள் வீச்சுக் குழு அட்டகாசம் – நகைகளும் பணமும் கொள்ளை…

by admin

மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்பாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்து பேருக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

யன்னலினூடு வாள்களை காட்டி கதவை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள் 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு சென்ற அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பிசென்றனர்.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அயலவர்களால் கொடிகாமம் காவற்துறையினருக்கு உடனடியாக அறிவித்த போதிலும், கொள்ளையர்கள் தப்பிச்சென்று சில நிமிடங்களின் பின்னரே  காவற்துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்றதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேவேளை கொள்ளை இடம்பெற்ற வீட்டு உரிமையாளர் கொடிகாம காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More