Home இலங்கை 3 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன – மறுநாள் காலை, பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டதனை அறிந்தேன்…

3 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன – மறுநாள் காலை, பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டதனை அறிந்தேன்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. மறுநாள் காலையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை அறிந்துகொண்டேன் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் தோன்றினர். வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலையானர்கள்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 40 சாட்சிகளில் இருவரின் சாட்சிகள் காவல்துறையினரின் வாக்குமூலத்துடன் போதுமானவை என அரச சட்டவாதி மன்றுரைத்தார். அதனால் அவர்களிடம் சாட்சியம் பெறாமல் முடிவுறுத்துவதற்கு மன்று அனுமதித்தது

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் உள்பட்ட மூவரிடம் நேற்றைய தினம் சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை இடம்பெற்றன. அதன் போதே சம்பவ இடத்திற்கு அருகில் வசித்த நபர் தனது சாட்சியத்தில் மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. மறுநாள் காலையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை அறிந்துகொண்டேன் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு வரும் ஏப்ரல் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி.

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரும் விபத்தில் உயிரிழந்ததாக முன்னதாக காவல்துறையினர் தெரிவித்த நிலையில் , பிரேத பரிசோதனையின் போது மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அது தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை மா அதிபர் பாரப்படுத்தினார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 5 காவல்துறையினரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த 5 காவல்துறை உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் காவல்துறை சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்

வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 சந்தேகநபர்களில் இரண்டாவது சந்தேகநபர் எக்கநாயக்க முதியான்சலாகே ஜயவர்த்தன, நான்காவது சந்தேகநபர் தங்கராஜன் லங்காமனன், ஐந்தாவது சந்தேகநபர் கமல விதானகே நவரத்ன பண்டார ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகநபர் சரத் பண்டார திசாநாயக்க மற்றும் சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகநபர் சமர ஆராய்சிலாகே சந்தன குமார சமர ஆராச்சி ஆகிய இருவருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று, சுருக்கமுறையற்ற விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More