Home இலங்கை பொது நிலைப்பாடு தொடர்பில் சந்திப்பு…

பொது நிலைப்பாடு தொடர்பில் சந்திப்பு…

by admin

தற்கால அரசியல் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் பொது நோக்கோடு ஒருங்கிணைக்கும் முயற்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பொன்று இன்று முன்னிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பொது அறையில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ. சேனாதிராஜா, சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன், சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க. அருந்தவபாலனும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் எஸ். ராகவன் ஆகியோரும் ரெலோ அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் நலன் நோக்கி, பொது நிலைப்பாடொன்றுக்கு வருவதற்கான இணக்க நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும், அது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரே உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடுவர் என்றும் சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், இன்றைய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததோடு அடுத்த சந்திப்பை எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை நடாத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டிருருப்பதாக அறிய வருகிறது.

இந்தச் சந்திப்பு இடம்பெற்ற வேளையில் வெளியார் எவரும் பொது அறைக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. வெளியாட்கள் பலர் மாணவர் பொது அறை வரை – பல்கலைக்கழகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட போதும், செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பு ஊழியர்கள் பிரதான வாயிலுக்கூடாக செல்வதற்கு அஅனுமதிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More