கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற  சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு  இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2008- 2009 இல் 11 பேர்  இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை  குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்  சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல  தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான  இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்  தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.