Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கில் முன்னிலையாக முடியாது :

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கில் முன்னிலையாக முடியாது :

by admin


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள் மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைகள் இடம் பெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் முன்னிலையாக முடியாது என்றும் அவர்களுக்கு வழக்காடுவதற்கான உரிமை இல்லை என்ற அடிப்படையில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் முன்னிலையாக முடியும் என்றும்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையானும் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் முன்னிலையாக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த எலும்புகள் அனைத்தும் பழமையானவை என்று கூறினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக இந்த சட்டத்தரணிகளை மன்றில் முன்னிலையாக வேண்டாம் என்னும் வைத்திய அதிகாரி ராஜபக்ஸவின் நோக்கம் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதே எமது வாதம் என சட்டத்தரணி வி.ஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு பணிகளின் போது மண் படைகளுடன் எலும்புகளோடு எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் இருக்கின்றது.

அனைத்துப் பொருட்களும் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அவற்றை தரம் பிரிக்கும் நடவடிக்கை கடந்த 26 ஆம் திகதி 06 ஆம் மாதம் இடம் பெற்றது. தரம் பிரித்தலின் போது அதில் உள்ள பொருட்கள் என்ன என்று எங்களினால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்த பொருட்களும் மீட்கப்பட்ட மனித எலும்புகளின் வயதெல்லையும் ஒத்துப்போக முடியாத நிலை ஏற்படும் போது தான் எங்களை வெளியேற்ற வேண்டும் என்கின்ற வாதத்தை அரச சட்டத்தரணிகள் மூலம் முன் வைத்துள்ளார்கள். இதன் அடிப்படையில் இறுதித் தீர்மானமாகவும் கட்டளையாகவும் சொல்லப்பட்டது.

‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாகவும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் இது வரை காலமும் மன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாக முடியாது’ என்று கூறப்பட்டது.

மனித எலும்புக்கூடுகளின் காலம் பற்றிய இறுதி அறிக்கை இவ்வாறான எல்லா அறிக்கைகளையும் ஒட்டு மொத்தமாக வைத்து இறுதி தீர்ப்பாக கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இடைக்கால அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.இன்னும் பல அறிக்கைகள் வந்துள்ளது.வர வேண்டியும் உள்ளது.

குறிப்பாக பிஸ்கட் பக்கட்டின் அறிக்கை ஒன்று வந்துள்ளது.அது 1990 ஆம் ஆண்டு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை விட மண் பரிசோதனை,நாறா பரிசோதனை அறிக்கைகள் உற்பட பல அறிக்கைகள் வர வேண்டி உள்ளது. மீட்கப்பட்ட காசு,தோடு ஆகியவற்றின் அறிக்கையும் வர வேண்டும்.

ஒட்டு மொத்த அறிக்கையின் படி தான் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எங்களினால் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(10) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்ற வழக்கு விசாரணையின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள் மன்னார் சதொச மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என்ற கட்டளையை மன்னார் நீதவான் எம்.கணேசராஜா வழங்கியுள்ளார்.என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவித்தார்.  #காணாமல்ஆக்கப்பட்டவர்கள்  #சட்டத்தரணிகள் #மனிதஎலும்புக்கூடு   #மன்னார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More