Home உலகம் கனடா விக்ரோரியா கடலில், கொள்கலன் கப்பலில் நச்சுப் புகை!

கனடா விக்ரோரியா கடலில், கொள்கலன் கப்பலில் நச்சுப் புகை!

by admin


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் விக்ரோரியா நகருக்குத்தெற்கே கடலில் தீப்பற்றியுள்ள கொள்கலன் கப்பல் ஒன்றில் இருந்து நச்சுப் புகை வெளியேறி வருகிறது. அதனால் கரையோரப் பகுதிகளுக்கு உடனடியான பாதிப்பு ஏதும்இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கப்பல் சிப்பந்திகள் 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நால்வர் தொடர்ந்தும் கப்பலிலேயே தங்கியுள்ளனர்.


சைப்பிரஸ் நாட்டின் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான”எம்.வி ஸிம் கிங்ஸ்டன்” (MV Zim Kingston) என்னும் கப்பலிலேயே சனிக்கிழமை காலை கொள்கலன்களில் தீப்பற்றியது என்ற தகவல் கரையோரக் காவல் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு கொள்கலன்கள் எரியத் தொடங்கியதும் டசின் கணக்கான கொள்கலன்கள் கடலில்வீழ்ந்துள்ளன. எரிகின்ற கொல்கலன் களில் நச்சு இரசாயனப் பொருளாகிய பொட்டாசியம் அமில்சந்தேற்(potassium amyl xanthate) அடங்கியிருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


சுரங்கத் தொழில் துறைக்குப் பயன்படுத்தப் படுகின்ற இந்தப் பொட்டாசியம் தானாகத் தீப்பற்றக்கூடியது. கடல் சூழலுக்கும் உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கக் கூடிய இந்த நச்சுப் பொருளின் பாதிப்பு கரையோரங்களுக்குப் பரவும் ஆபத்து உடனடியாக இல்லை என்று கூறப்படுகிறது.


எரியும் பொருளின் தன்மை கருதி தீயின் மீது தண்ணீர் பாய்ச்சி அணைப்பதைத் தவிர்த்து குளிர்ந்த நீரை விசிறிக் கப்பலைக் குளிரூட்டி தீ ஏனைய கொள்கலன்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகக் காவல்படை (Canadian Coast Guard) தெரிவித்திருக்கிறது.


கடும் காற்றுடன் கூடிய புயல் காலநிலைநிலவுவதால் கடலில் வீழ்ந்த கொள்கலன்களை மீட்கமுடியாதுள்ளது. கப்பலைச் சூழ குறிப்பிட்ட கடல் மைல் சுற்றுவட்டாரத்துக்கு ஆபத்து வலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: Tweeter-Canadian Coast Guard)

குமாரதாஸன். பாரிஸ்.
23-10-2021

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More