Home இலங்கை ‘வடக்கு இளைஞர்களுக்கு உதவுவேன்’ முன்னாள் புலிகளிடம், மஹிந்தானந்த உறுதி!

‘வடக்கு இளைஞர்களுக்கு உதவுவேன்’ முன்னாள் புலிகளிடம், மஹிந்தானந்த உறுதி!

by admin

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வடக்கு இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள் என்றால், விவசாயத்துக்கு தேவையான இடம் மற்றும் உதவிகளைச் செய்ய தான் தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட சிலர், நேற்று முன்தினம் (10.11.21) விவசாயத்துறை அமைச்சரை, அவரது அமைச்சில் சந்தித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாய ரீதியில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட விருப்பமுள்ள வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தேவையான உதவிகளை தன்னால் செய்துகொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு விவசாயத்தில் ஈடுபட ஆர்வமுடைய வடக்கு இளைஞர்களுக்காக அரை ஏக்கர் நிலத்தை வழங்கவும் அதற்கு தேவையான உரம், நீர், கிருமிநாசினிகள் உள்ளிட்டவைகளை தமது அமைச்சு ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் விவசாயத்துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் போது, புனர்வாழ்வளிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சருடனான குறித்த சந்திப்பின் போது, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார, சமூக, வாழ்வாதார பிரச்சினைகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More