Home இலங்கை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துங்கள்”

“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துங்கள்”

by admin

யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும் மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று (02.02.22) யாழ். கச்சேரி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் பி. மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலில் ஐநாவுக்கான வதிவிடப் பிரதிநிதி இடம் மாநகர முதல்வர் பின்வரும் கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்தார்.

கொடிய யுத்தம் நடைபெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை போரை நிறுத்தும் எமது மக்களை காப்பாற்றும் என்று நாம் பெரும் நம்பிகை கொண்டிருந்தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. 150,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். இந் நிலையில் போருக்கும் பிற்பாடும் ஐநா தொடர்ந்தும் தவறு இழைத்து வருகின்றது.

யுத்ததத்தில் போர்குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகின்ற படை அதிகாரிகள் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் தமிழ் இனத்தின் மீது மேற்கொண்டதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.

இனப்படுகொலை என்பது சர்வதேச குற்றம் அதை யாரும் ஒரு நாட்டின் உள்ளக ரீதியான பிரச்சனை என்று கைவிட்டு விடமுடியாது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் எங்களுடைய பொருளாதார வளம், கல்வி பண்பாடுகள் கலாச்சாரம் போன்ற எங்களுடைய அடிப்படைகள் அழிக்கப்படுகின்றன.

2 ஆம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஏன் உருவாக்கப்பட்டததெனில் நாடுகளைப் பாதுகாப்தற்கு அல்ல அந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக. அந்த நியாயப்பாட்டை அதன் முக்கியத்துவத்தை ஐ.நா முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியுத்தம் தொடர்பான மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டுமல்ல கடந்த காலங்களில் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பிலும் கரிசனை செலுத்துவதோடு அதற்கான தீர்வையும் எமக்கு பெற்றுத் தரவேண்டும்.

தற்போதும் எங்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வலி வடக்கு பகுதியில் பல நூற்றுக்காணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இராணுவம் கடற்படை விமானப்படை என தங்களுடைய படைத் தேவைகளுக்காக அபரிக்கப்படுகின்றன. அந்த காணி உரிமையளார்கள் இடைத்தங்கல் முகாங்களில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனா். எமது பொருளாதரம் என்பது இரண்டு விடயங்களில் தங்கியுள்ளன. ஒன்று விவசாயம் மற்றது மீன்படி. இன்று எமது விவசாய காணிகள் பலவற்றை இராணுவம் தமது தேவைகளுக்காக பயன்படுத்துகின்றது. இதனால் எமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. மீன்பிடி என்பது அரச இயந்திரத்தையும் தாண்டி தற்போது இந்திய மீனவர்களின் அத்து மீறலால் எங்களுடைய மீனவர்கள் பெரும் துன்பம் அடைகின்றார்கள். அவர்களது வலைகள் அறுக்கப்படுகின்றன படகுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்களில் திட்டமிட்டு எமது பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது என்றார்.

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ் மண்டபம் அமைப்பதற்கு முன்னர் இலங்கை அரசாங்கமும் இந்தியா அரசாங்மும் கலாச்சார மண்டபத்தினை அமைத்து அதனை யாழ். மாநகர சபையிடம் கையளிப்பது என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இக் கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர் தற்போது இது யாழ். மாநகர சபைக்குத் தரமுடியாது மத்திய அரசாங்கத்திடம் தரவேண்டும் என்று அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்கு மேல் அது திறக்கப்படாமல் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறப்படுகின்றது. எப்படி அது சாத்தியம் இங்கு தமிழர்கள் சிங்களவர் முஸ்லிம் மலையகத் தமிழர் என்று பல இன மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு என்று ஒரு வரலாறுப் பண்பாட்டு பாரம்பரியங்கள் உள்ளன. அவர்களின் வரலாற்றில் இருந்து தான் சட்டங்கள் இயற்ப்பட வேண்டுமே ஒழிய பெரும்பான்மை இனத்தின் வரலாற்றைக் கொண்டு சட்டங்களை இயற்றிக் கொண்டு அதனை ஏனைய இனங்கள் மீது திணிக்கின்ற நிலைமை இங்கு காணப்படுகின்றது.

எமது அரசியில் அபிலாசைகளை நாம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஆனால் நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் போதாது. அரசியல் கைதிகள் சிறைகளில் பல்லாண்டு காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். காணாமல் போன உறவுகள் நீதி வேண்டி போராடுகின்றார்கள். அவ்வாறு இருக்கையில் நீங்கள் விடுகின்ற வெறும் அறிக்கைகள் அல்லது தீர்மானங்கள் எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுகளைத் தராது. அறிக்கைகள் ஆறுதல் அளிக்காது. கூடிய விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது விசேட குற்றவியல் நீதிமன்றத்தின் மூலமாகவே எமக்கான பிரச்சனைகளுக்கான நிரந்த தீர்வுகள் எட்டப்படும் என்பதில் எமது தமிழ் அரசியல் தலைவர்களும் மக்களும் விரும்புகின்றார்கள்.

நான் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ஒன்று எமது இனத்தின் மீது காலாகாலம் மேற்கொள்ளபட்ட இனவழிப்புகளுக்கு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கிடைக்கப்பெற வேண்டும். சுயநிர்ணய உரிமை அங்கீகிக்கப்பட்ட எமக்கான அரசியல் தீர்வை பெற ஐ.நா உதவ வேண்டும். இரண்டாவது திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற பொருளாதார கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கு எமது மக்களுக்கான வாழ்வியலை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More