Home உலகம் சுவிஸில் உக்ரைன் அகதிகளுக்கு தற்காலிக “எஸ்” வதிவிட அனுமதி!உடனேயே வேலை செய்யும் வசதி

சுவிஸில் உக்ரைன் அகதிகளுக்கு தற்காலிக “எஸ்” வதிவிட அனுமதி!உடனேயே வேலை செய்யும் வசதி

by admin

பேர்ளின் புகையிரத நிலையத்திலும் வந்து குவிகின்றனர் அகதிகள் ! ஜேர்மனிக்குப் பெரும் சவால்!

சுவிற்சர்லாந்து நாட்டுக்கு வருகின்ற உக்ரைன் அகதிகளுக்கு இதுவரை எந்தநாட்டவருக்கும் வழங்கப்படாத விதமாக “எஸ்” என்னும் வதிவிட அனுமதி(S permit) உடனடியாகக் கிடைக்கவுள்ளது. நாட்டின் நீதி அமைச்சர் Karin Keller-Sutterஇந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறார்.

ஆரம்ப கட்டமாக ஓராண்டு காலம்நாட்டில் தங்குவதையும் உடனடியாகத் தொழில் ஒன்றைத் தேடிக் கொள்வதையும் அனுமதிக்கின்ற இந்த எஸ் (S) வீஸா1999 இல் பால்கன் மோதலின் (Balkan conflicts) போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு வெளிநாட்டு அகதிகளுக்கு முதல் தடவையிலேயே அந்த “எஸ்” அனுமதி வழங்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பம் ஆகும்.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் ஆறாயிரம் உக்ரைனியர்கள் சுவிஸில் தங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். 50,000-60,000 வரையான உக்ரைன் அகதிகள் நாட்டுக்குள் வருகைதரக் கூடும் என்று சுவிஸ் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சுவிஸ் கன்ரன்களில் இயங்கும் புகலிட நிலையங்களில் 5 ஆயிரம் தங்கும் இடங்களும், தனிபட்டவர்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 45 ஆயிரம் தங்கும் இடங்களையும் அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்.

ஐ. நாவின் மதிப்பீடுகளின் படி இதுவரை 2.5மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானோர் போலந்து நாட்டில் தங்கியுள்ளனர். அங்கிருந்து பின்னர் அவர்கள் வாகனங்களிலும் புகையிரதங்களிலும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிவந்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக புகையிரதங்களில் உக்ரைனியர்கள் வந்து சேர்வதால் பேர்ளின் புகையிரத நிலையம் அகதிகளால் நிறைந்து காணப்படுகிறது. அவர்களை வரவேற்கவும் உதவிகளைச் செய்வதற்கும் அங்கு தொண்டர்கள் முழு மூச்சுடன் சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மிகக் குறுகிய நாள்களுக்குள் மிகப் பெரும் அகதிகள் படையெடுப்பை உக்ரைன் யுத்தம் உருவாக்கியுள்ளது. இதுபது நாட்களுக்குள் இருபத்தைந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் ஜேர்மனிக்குள் வருகை தந்துள்ளனர்.ஜேர்மனி எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றியே அகதிகளை உள்ளெடுக்கிறது. சிரியப் போரின் போது பெரும் தொகையான சிரிய அகதிகளை உள்வாங்கிய நாடு ஜேர்மனி. அதேபோன்று பல லட்சம் உக்ரைன் அகதிகளும் ஜேர்மனியில் அடைக்கலம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சம் கோரிவருகின்ற உக்ரேனியர்களால் ஜேர்மனி”மிக மிகப் பெரும் சவாலை எதிர்கொள்கிறது” – என்று சான்சிலர்ஓலாப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார்.

(படங்கள் :கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேர்ளின் புகையிரத நிலையத்தில் எடுக்கப்பட்ட உக்ரைன் அகதிகளின் காட்சி)

——————————————————————— –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 19-03-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More