Home இலங்கை கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு.

 கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  அமைச்சர் டக்ளஸ் வரவேற்பு.

by admin

அரசியல் தீர்வு தொடர்பான  பேச்சுக்களின் போது, நிலைமைகளுக்கு ஏற்ப கலந்தாலோசனை மூலம் தீர்மானங்களை மேற்கொள்வது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக பேசுகின்ற போது, இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வையே தீர்வாக வலியுறுத்துவது எனவும், பின்னர் பேச்சுவார்த்தையின் நிலமைகளுக்கு ஏற்ப, விடயங்களை கலந்தாலோசித்து தீர்மானிப்பதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

 

குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

 

 “யதார்தத்தினை புரிந்து கொண்டு பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கு கூட்டமைப்பினர் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை கூட்டமைப்பினரின் அண்மைய தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.

 

நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகள் ஊடாகவே தமிழ் மக்களின் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என்று கடந்த 35 வருடங்களாக நான் கூறி வருகின்ற யதார்த்தத்தினை கூட்டமைப்பினர் தற்போது புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது” என்று தெரிவித்தார்.

 

மேலும், குறித்த நிலைப்பட்டில் கூட்டமைப்பினர் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அமைதியான சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில் அனைத்து தமிழ் தரப்பினரும், தற்போதைய அரசியல் சூழலை கையாள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More