Home இலங்கை நலன்புரி முகாம்களை மூடுவதற்கு திட்டம்!

நலன்புரி முகாம்களை மூடுவதற்கு திட்டம்!

by admin

விடுதலைப் புலிகளுடனான யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 273,498 குடும்பங்களில் 271,171 குடும்பங்கள் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டு முடிந்து விட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அப்பிரிவின் அறிக்கைகளின்படி 2,327 குடும்பங்கள் இன்னும் மீள் குடியமர்த்தப்பட இருப்பதாகவும்,  அவர்களையும் மிக விரைவாக மீள்குடியேற்ற உள்ளதாகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் மீள்குடியமர்த்தப்படவுள்ள 2,327 குடும்பங்களில் 152 குடும்பங்கள் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மிகுதி 2,175 குடும்பங்களும் நலன்புரி நிலையங்களில் சேராமல் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மீள்குடியேற்ற பிரிவு எண். 2187/27 09-08-2020 திகதி சிறப்பு வர்த்தமானி மூலம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் இந்தியாவிற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றன. புலம்பெயர்ந்த குடும்பங்களை அவர்களது சொந்த கிராமங்களில் குடியமர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கமைத்து ஒருங்கிணைக்கவும் மீள்குடியேற்றப் பிரிவின் ஊடாக நடைபெறுகிறது.

அங்கு அவர்களுக்கு வீடுகள் மற்றும் தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

விடுதலைப் புலிகளின் யுத்த நிலைமை காரணமாக 271,171 குடும்பங்கள் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வட மாகாணத்தில் யாழ். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களில் குடியேறினர்.

போரினால் இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து திரும்பவும் இலங்கைக்கு வரும் குடும்பங்களுக்கும் இலங்கையில் தங்கியிருந்த குடும்பங்களுக்கும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 38,000 ரூபாய் அரசாங்கத்தின் உதவி பணம் தரப்படும். மேலும் அவர்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் மூலம் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

காணி வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக வீடு கட்ட ரூ 25,000, நிலத்தை சுத்தம் செய்ய ரூ.5,000, தேவையான உபகரணங்கள் வாங்க ரூபா 3,000 மற்றும் பிற உணவு அல்லாத பொருட்கள் வாங்க ரூபா 5,000 நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள் பிரதேச செயலாளரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி இடம்பெயர்ந்தவர்களுக்காக 148,848 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்திய உதவி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி மூலம் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன

இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் வீடுகளை வழங்கவும், இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களை மூடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More