Home இந்தியா முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

முருகனை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

by admin

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

வெளிநாட்டு பிரஜையான முருகன், திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி, நளினி, மத்திய அரசுக்கு மனு அனுப்பியிருந்தார்.

அந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், கடவுச்சீட்டு பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளி வர முடியவில்லை எனவும், அதனால் திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினர்களுடன் தங்க அரசு அனுமதித்துள்ளதாகவும், சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புக அரசு அனுமதித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More