Home இலக்கியம் கருவறைக்குள் சிக்குண்ட மகவுகள் – சி.ஜெயசங்கர்.

கருவறைக்குள் சிக்குண்ட மகவுகள் – சி.ஜெயசங்கர்.

by admin

 

குழந்தைகள் பிறப்பது
குழந்தைகள் பெற்றெடுப்பது
இயல்பானது
இயற்கையானது என்பது
மறக்கவைக்கப்பட்ட நவீனகாலத்தில்

வெட்டுக்கருவிகளுடன் நிபுணர்கள்
சீசரை கருவறையுள் இருந்து
மீட்டவரின் வாரிசுகள்
அடிமடியைக் “கீறிக்கிழித்தல்”
இயல்பாக நவீனமாக
துரிதப்படுத்தப்பட்ட பொறிமுறையாக…

குற்றவாளிகள்!
குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர்
ஆயிரமாயிரம் குழந்தைகளை
ஆண்டாண்டு காலமாகப்
பெற்றெடுத்த கரங்கொண்டோர்

ஆண்டாண்டு காலமாகப்
பெற்றெடுத்த கரங்கள்
அஞ்சிக் கிடக்கின்றன
கைவிலங்குகளுக்கு.

உருச்சிதைப்புச் செய்யப்பட்டனர்
முகம் மாற்றப்பட்டனர்
கீழ்நிலைப்படுத்தி
கையாட்களாக மாற்றப்பட்டனர்

நவீன அறிவொளியில்
காலாதிகாலப் பார்வையும் பயில்வும்
இழக்கவைக்கப்பட்டனர் மனிதர்.

நவீனத்தின் இருண்ட பக்கங்களுக்குள்
முடங்க வைக்கப்பட்டது
மரபுலகும் உள்ளுர் அறிவும்

மகபேற்றின் மனித இயல்பை
சட்டென கிழித்து மறைத்தது
நவீனகாலம்

விடுதலை
“முடி”களுக்கானது அல்ல

அடிமடி வெட்டி
விரும்பிய காலத்தில்
பிள்ளையை வெளியிறக்க
ஊசியில்லை மருந்தில்லை
கத்தி கொண்டு
காலத்தைக் கையிலெடுக்க
வழியில்லை

மகவுகள்
கருவறைக்குள் சிறைப்பட்டனர்

இயல்பை இயற்கையை
விட்டுவைக்காதது
வணிமகாகிய விஞ்ஞானம்

விதிவிலக்குகளை வழமையாக்கி
பெருக்கெடுக்கும்
விஞ்ஞான வணிகத்தில்
விபத்து
கருவறையுள் சிக்குண்டன
மகவுகள்.

வினைகின்றது தேகம்
விளையாடுகின்றது தேசம்

விடுதலை
“முடி”களுக்கானது அல்ல

சி.ஜெயசங்கர்.

 

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More