Home இலங்கை வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

by admin
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை  காவல் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  இரும்பு பாதுகாப்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும்,  காவல்மதுறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஏனைய  காவல்நிலையத்தில் இருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.  இளைஞனை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தியதால் தான் இளைஞன் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் , காவல்துறையினர் தன்னை எவ்வாறு சித்திரவதை செய்தனர் என கூறும் உயிரிழந்த  இளைஞனின் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
இந்நிலையில் இளைஞனின் உறவினர்கள் , நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை  காவல்  நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த  காவல்துறை  அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்கு ஏதுவாக வட்டுக்கோட்டை  காவல் நிலையத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை   உத்தியோகஸ்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் பிறிதாக ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More