Home இலங்கை சித்திரவதையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தது உள்ளது – நால்வரை கைது செய்ய நடவடிக்கை

சித்திரவதையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தது உள்ளது – நால்வரை கைது செய்ய நடவடிக்கை

by admin
மல்லாகம் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் உயிரிழப்புக்கு அவர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் யாழ் போதன வைத்தியசாலையில், சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சித்தன்கேணி பகுதியை சேர்ந்த  நாகராசா அலெக்ஸ் (வயது 25) எனும் இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம்.

உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையால் தான் இளைஞன் உயிரிழந்துள்ளார் என குற்றம் சட்டி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞனின் வாக்குமூலம்.

அந்நிலையில், உயிரிழந்த இளைஞன் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வரும் போது , தனக்கு நடந்த சித்திரவதை தொடர்பில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் ” என்னை காவல்துறையினர்  காவல்  நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி தாக்கினார்கள். துணி ஒன்றினால் முகத்தினை மூடி கட்டி தண்ணீர் ஊற்றி தாக்கினார்கள். பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் பை ஒன்றினை முகத்தில் போட்டு சித்திரவதை புரிந்தார்கள்.

பின்னர் எனக்கு குடிக்க சாராயம் தந்தார்கள். தாக்குதல்கள் சித்திரவதைகள் தொடர்பில் வெளியில் சொல்ல கூடாது என கடுமையாக என்னை மிரட்டினார்கள். காவல்துறையினரின் தாக்குதலுக்கு பிறகு என்னால் சாப்பிட முடியவில்லை. என தெரிவிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

துணைக்கு சென்ற நண்பனும் கைது.

அதேவேளை , உயிரிழந்த இளைஞனை கடந்த 08ஆம் திகதி விசாரணை ஒன்றுக்காக வட்டுக்கோட்டை காவல்துறையினர் அழைத்தனர். அவர் தனியே செல்ல பயத்தில் நண்பர் ஒருவரையும் கூட அழைத்து சென்று இருந்தார்.

காவல் நிலையம் சென்ற இருவரும் வீடு திரும்பாததால் மறுநாள் 09ஆம் திகதி காவல் நிலையம் சென்று விசாரித்த போது ,  காவல்துறையினர் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.

இரண்டு நாட்களாக தேடி அலைந்தோம்.

பின்னர் 10ஆம் திகதியும் நாம் அவர்களை தேடி  காவல்து  நிலையம் சென்ற போது உயிரிழந்த அலெக்ஸ்சின் கதறல் சத்தம் எமக்கு கேட்டது. நாம் அவரை காட்டுமாறு கோரிய போது , காவல்துறையினர் எம்மை மிரட்டி அனுப்பினார்.

மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அதனை அடுத்து நாம் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம்.

இரண்டு நாட்களின் பின் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அந்நிலையில் 10ஆம் திகதி உயிரிழந்த அலெக்ஸ் மற்றும் அவருக்கு உதவியாக சென்ற அவரது நண்பர் மீது , வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற களவு சம்பவத்ததுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய போது, அவர்கள் இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலையே இருந்தனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் அவர்களை தடுத்து வைத்திருந்த போது, அலெக்ஸ்சின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் , சிறைச்சாலை நிர்வாகத்தால் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விசாரணைக்கு காவல்துறை  குழு நியமிப்பு

சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் காவல்துறையினர் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவி காவல்துறை  அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஏதுவாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு காவல்துறை   உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனையில் சித்திரவதைக்கு உள்ளானது அம்பலம்.

உயிரிழந்தவரின் சடலத்தின் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

அதன் போது , உடலில் அடிகாயங்கள் காணப்பட்டமை , சித்திரவதை மற்றும் தாக்குதலுக்கு உள்ளானமையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் , இதொரு இயற்கை மரணம் இல்லை எனவும் அறிக்கையிடப்பட்டுள்ளது.
கைது செய்ய நடவடிக்கை. 
உடற்கூற்று பரிசோதனையில் இயற்கை மரணமில்லை எனவும் , சித்திரவதை மற்றும் அடிகாயங்களுக்கு உயிரிழந்த இளைஞன் உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் உதவி  காவல்துறை   அத்தியட்சகர் தலைமையிலான  காவல்துறை  அதிகாரிகள் குழுவின் விசாரணைகளில் அடிப்படையில், வட்டுக்கோட்டை  காவல்   நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் (SI) உள்ளிட்ட நால்வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக  காவல்துறை   தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
சடலம் ஒப்படைப்பு. 
உடற்கூற்று பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டமையை அடுத்து, சடலம் இளைஞனனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு
 இளைஞனின் உறவினர்கள் , நண்பர்கள் ஊரவர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி பாரிய போராட்டம் ஒன்றினை  காவல்   நிலைய பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாககாவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேலதிக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் வட்டுக்கோட்டை  காவல் நிலைய பகுதிகளில் குவிக்கப்பட்டு,  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
இறுதி கிரியைகள். 
சடலம் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றதால், இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிப்போம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More