Home இலங்கை வடக்கு கிழக்கில் தனி ஈழம் அமையும் என்கிறார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!

வடக்கு கிழக்கில் தனி ஈழம் அமையும் என்கிறார் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!

by admin

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ. நா. சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14.05.24) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இனறைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  கருத்து தெரிவித்த அவர்,

இஸ்ரேல் நாட்டில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சியின் மீது பலஸ்தீனம் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. யுத்தம் கொடுமையானது. யுத்தத்தின் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் நேரிடும்.அப்பாவி மக்களே கொல்லப்படுவார்கள்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா,ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயற்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் வெட்டிக் கொலை செய்யும் போது புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.அதேபோல் இலங்கை இராணுவத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் பிரேரணைகளை கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு அப்பாவி மக்களை கொலை செய்து கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள். இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார் . இது சாதாரணமானதல்ல.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும். தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றிப் பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்..

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More