Home இலங்கை தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் -தமிழரசிலிருந்து சிறிதரனை நீக்க முடியாது

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் -தமிழரசிலிருந்து சிறிதரனை நீக்க முடியாது

by admin
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே அமைத்து தேசியத்தையும் இருப்பையும் காத்துக்கொள்ள முடியும் என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி . கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில் உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாகவும், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்ந்தோம். ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் பேசி அவர்களுடன் ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து தற்போதைய அரசியல் சூழலுக்கு அமைய  நாம் ஒரு தேசிய இனமாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என தீர்மானித்துள்ளோம்.
அதனால் எமது தனித்துவத்தை பேணும் வகையில் ஏனைய தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறேன்.  தேசிய கட்சியில் உள்ள தமிழர்கள் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். அவர்களால் தனித்து பேச முடியாது அதனால் தமிழ் தேசிய கட்சிகளை பலப்படுத்த வேண்டும்.
தனித்தனியாக ஒரு பொது இணக்கப்பாட்டுடன், சக தமிழ் கட்சிகளை தாக்காது, அவர்களை எதிர்க்காமல் போட்டியிடுவது தொடர்பிலும், தமிழரசு கட்சியின் வேட்பாளர் பட்டியல்களில்  வெற்றிடங்கள் உள்ளன அவற்றிலும், ஏனைய கட்சியினரையும் இணைத்து போட்டியிடவும் தயார்
உள்ளூரராட்சி சபைகள் தமிழ் தேசிய கட்சியாக நாம் ஒன்றிணைந்து கைப்பற்ற வேன்டும். வடக்கு கிழக்கு மக்களாகிய நாம் எம் இனம் சார்ந்து நம் இருப்பை தக்க வைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
தமிழரசிலிருந்து சிறிதரனை நீக்க முடியாது
தமிழரசு கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நீக்க முடியாது. சிறிதரனை நீக்க வேண்டும் என மத்திய குழுவிலும் யாரும் கோரவில்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக அமையத்தில் இன்றைய  தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல் காலங்களில் கட்சியில் இருந்து விலகாமல் விலகி போய் எதிரணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டவர்களை நீக்குவது என்பது மத்திய குழுவின் தீர்மானம். அது இறுதியானது.
ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் , ஆதரவு தெரிவித்தவர்களிடம் விளக்கமே கோரப்பட்டுள்ளது. விளக்கம் கோரப்பட்டது என்பது நீக்குவது  அல்ல. அவர்கள் பொருத்தமான விளக்கம் சொன்னால் , ஒழுக்காற்று குழு அது தொடர்பில் தீர்மானிப்பார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன் என மத்திய குழுவிடம் மிக தெளிவாக கூறி விட்டு தான் ஆதரவு தெரிவித்தார்.  அது மத்திய குழுவின் தீர்மானத்தை மீறிய செயல் தான். அதற்காக அது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் ஒழுக்காற்று குழு முடிவெடுக்கும்.  சிறிதரனை கட்சியை விட்டு நீக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. யாரும் மத்திய குழுவில் இது தொடர்பில் பேசவும் இல்லை என தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More