இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றப் பதிவாளர் எழுத்தில் இது குறித்துத் தெரிவித்ததையடுத்து, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் கோபுரத் திட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீது சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகைகள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திலகரத்னவின் பெயரைப் பயன்படுத்தி இந்த பத்திரிகையாளர்கள் முகநூல் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த முகநூல் பதிவுகள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றப் பதிவாளர், இந்த விடயத்தில் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் நீதிபதியிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி, மேற்படி முகநூல் பதிவுகளுடன் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் அதன் பிறகு அவர் பொருத்தமான உத்தரவைப் பிறப்பிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரு மூத்த பத்திரிகையாளர்களும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட பின்னர், தற்போது வெளிநாட்டில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

